
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடாத நிலையில், ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழ் வழி கல்வி பயின்ற 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பாணையில் தெரிவிக்காமல், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக செப்டம்பர் 6ஆம் தேதி பதில் அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.